குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

அக்டோபர் 16,2009. செய்தி: தினத்தந்தி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, ஐந்து வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்க்கு, ஆயுள் தண்டனை வழங்கி, பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரம்பலூர் ரெங்கா நகரைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம்(35);

இவரது மனைவி வகிதா(30). அப்துல்ரஹீம், ஏழு ஆண்டுக்கு முன், கூலி வேலைக்கு ரியாத்துக்கு சென்றார். வகிதா, தனது ஐந்து வயது மகள் பர்கானாவுடன், திருச்சி மாவட்டம் கொளக்குடியில் உள்ள தன் அப்பா ஜமால்முகமது வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி, அப்துல்ரஹீம், வகிதாவுக்கு போன் செய்து, "உனது நடத்தையில் சந்தேகம் உள்ளது.

அதனால், பெரம்பலூரில் எனது தாய் வீட்டில் தங்கியிரு. மகள் பர்கானாவை பெரம்பலூரில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வை' என்று கூறினார். அன்றிரவு, வகிதா தனது மகள் பர்கானாவுடன் பெரம்பலூரில் உள்ள தன் மாமியார் பஷீரா வீட்டுக்கு வந்து தங்கினார். அடுத்த நாள் (21ம் தேதி) காலை 9 மணிக்கு, வகிதா தனது மாமியார் பஷீராவிடம், பர்கானாவுக்கு இட்லி வாங்கி வருமாறு கூறி கடைக்கு அனுப்பினார்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பர்கானாவை அழைத்து, தன் சேலை முந்தானையால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, வகிதா தப்பி ஓடி விட்டார். போலீசார், வகிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின், வகிதா ஜாமீனில் வெளியில் வந்தார். இவ்வழக்கு, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. பின், பெரம்பலூர் மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த மகிளா கோர்ட் நீதிபதி, நேற்று, வகிதாவுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் ஆறு மாத காலம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். வகிதா, திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.