பெண்கள் நாட்டின் கண்கள்!!: அத்தை மகனை கொலை செய்ய பத்தாம் வகுப்பு மாணவனை கூலிப்படையாக்கிய கல்லூரி மாணவி!

பெண்கள் நாட்டின் கண்கள்!!: அத்தை மகனை கொலை செய்ய பத்தாம் வகுப்பு மாணவனை கூலிப்படையாக்கிய கல்லூரி மாணவி!
கொலை செய்ய தூண்டியது காதல் ; கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது  
மே 01,2013 தினமலர்


திருப்பூர்: திருப்பூர் அருகே, காதலனுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அத்தை மகனை கொலை செய்ய தூண்டிய கல்லூரி மாணவி உட்பட, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுட்டன், 27; கட்டட தொழிலாளி. இவருக்கும், இவரது மாமா மகள், அவிநாசியைச் சேர்ந்த, சத்யா, 23, என்பவருக்கும், வரும், 6ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. சத்யா, திருப்பூரில் உள்ள கல்லூரியில், இரண்டாமாண்டு எம்.ஏ., படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த, 25ம் தேதி, குண்டடம், சித்தூர் பிரிவு அருகே, ஆனந்தகுட்டன், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், மொபைல் போன் எதுவும் திருடப்படவில்லை.

இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜன், ஹேமா தலைமையில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சத்யா, திருப்பூர் செவந்தாம்பாளையத்தைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன், அத்தை மகன் ஆனந்தகுட்டனுடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. காதலனை மறக்க முடியாத சத்யா, ஆனந்தகுட்டனை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த, 25ம் தேதி, திருப்பூருக்கு, ஆனந்தகுட்டனை வரவழைத்து, திருமண விஷயம் எனக் கூறி, மணிகண்டனுடன், ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். அவர்களுடன், ஜெய்நகரைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்கள் சதீஷ்குமார், 21, விவேக், 21 மற்றும் 10ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார், 16 ஆகியோரும் சென்றுள்ளனர்.

கோமங்கலம் அருகே, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மணிகண்டன், இரும்பு ராடால், ஆனந்தகுட்டனை தலையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும், கொலை செய்துள்ளார். உடன் வந்த, மூன்று பேரின் உதவியுடன், உடலை ஆட்டோவில் ஏற்றி, குண்டடம் அருகே வீசி சென்றுள்ளார். இவர்கள், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, தாராபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.