ஐ.பி.எஸ். அதிகாரி மீது 498A வழக்கு

சென்னை, செப்.8- 2009. செய்தி: தினத்தந்தி.

சுட்டி: http://www.dailythanthi.com/article.asp?NewsID=512726&disdate=9/8/2009&advt=1

ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி மீது அவரது மனைவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி வரதட்சணை தடுப்பு உதவி போலீஸ் கமிஷனருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் தண்டியப்பன். இவரது மகள் ஷர்மிளா நேற்று காலையில் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

இளம் பெண் ஷர்மிளாவோடு சீனியர் வக்கீல் சுதா ராமலிங்கமும் (இந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!) வந்திருந்தார். ஷர்மிளாவின் கணவர் பெயர் எஸ்.ஆர்.சாமுவேல் என்பதாகும். ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார்.

தனது கணவர் மீது ஷர்மிளா கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு, சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மானேஜர் அந்தஸ்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தேன்.

இந்த நிலையில், பரமக்குடியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் என்னை வந்து பெண் பார்த்தார்கள். எனது பெற்றோரையும் சந்தித்து பேசினார்கள். எனது கணவரும் முறைப்படி எனது அலுவலகத்தில் வந்து என்னை பெண் பார்த்தார்.

`நான் ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், நீ இந்த வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டும்' என்றும் கூறினார். நானும் அவரை திருமணம் செய்ய சம்மதித்து எனது வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.

2.2.2009 அன்று சுயமரியாதை முறைப்படி சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எங்களது திருமணம் நடந்தது. அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணத்துக்கு முன்புவரை நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து முருகர் பக்தன் என்றும், திருப்பதி ஏழுமலையான் பக்தன் என்றும் எனது கணவர் பக்தி பரவசத்தோடு காட்சி அளித்தார். திருமணத்துக்கு பிறகுதான் அவரது சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.

நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சுத்த சைவம். அசைவம் சாப்பிட மாட்டோம்.

எனது கணவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறிவிட்டதாகவும், சாமுவேல் என்ற பெயரை `சாம்வேல்' என்று மாற்றிவிட்டதாகவும்' கூறினார். அவரை நல்லவர் என்று நம்பி நான் மோசம் போனேன். திருமணம் முடிந்த பிறகு அவர் எங்கள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார்.

சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தான் எங்களது முதலிரவு நடந்தது. முதலிரவின்போது நன்றாக குடித்துவிட்டு போதையில் வந்தார்.

அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சொன்னவர் சிக்கன் பிரியாணியை வரவழைத்து சாப்பிட்டார். என்னையும் கட்டாயப்படுத்தி சிக்கன் பிரியாணியை சாப்பிட சொன்னார்.

அசைவம் எனக்கு பிடிக்காததால், அவர் கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு நான் வாந்தி எடுத்தேன். திருமணத்துக்கு முன்பு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று எனது கணவர் கூறினார். இருந்தாலும் எனது பெற்றோர் 78 சவரன் நகைகள் எனக்கு வரதட்சணையாக போட்டு அனுப்பினார்கள்.

முதலிரவு அறைக்குள் நுழைந்தவுடன் நீ போட்டிருக்கும் நகைகளை எல்லாம் கழற்றி எடுத்துக்கொண்டு வா என்று உத்தரவுபோட்டார். நானும் நகைகளை கழற்றி ஒரு தட்டில் எடுத்து வைத்தேன்.

நகைகளை கையில் தூக்கி பார்த்து `நான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, எனக்கு வரதட்சணையாக இவ்வளவு நகைகள்தான் போடுவீர்களா' என்று கேவலமாக பேசினார். எங்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிட வரும்படி பெற்றோர்கள் அழைத்தார்கள். பிடிவாதமாக வர மறுத்துவிட்டார். 14.2.2009 அன்று விமானத்தில் என்னை டெல்லி அழைத்து சென்றார். எனது பெற்றோர் விமானநிலையத்துக்கு வந்து தான் வழி அனுப்பினார்கள். டெல்லியில் ஒரு நண்பர் வீட்டில் தங்கினோம். அங்கும் நண்பர் முன்பே என்னை கேவலமாக பேசினார்.

காஷ்மீரிலும் என்னை ஒரு சிறை பறவை போலவே வீட்டில் அடைத்து வைத்திருந்தார். வேலைக்காரர்கள் முன்னிலையில் என்னிடம் அன்பாக பேசுவதுபோல் நடிப்பார்.

வேலைக்காரர்கள் போனதும் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். ஒருகட்டத்தில் என்னை கொலை செய்யவும் துணிந்துவிட்டார்.

போனில் பேசி அடியாட்களை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ரூ.5 லட்சம் கூலி தருகிறேன். ஒரு பெண்ணை கொலை செய்து காஷ்மீர் பனிகட்டியில் புதைக்க வேண்டும் என்று என் முன்னாலேயே பேசினார். போதைப்பொருள் வழக்கில் எனது பெற்றோரை சிக்கவைத்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.

இனிமேலும் அவரோடு வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து என்று பயந்தேன். எனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து தப்பி சென்னை வந்துவிட்டேன்.

அவர் முழுக்க, முழுக்க என்னை ஏமாற்றி மோசடி திருமணம் செய்துவிட்டார். கிறிஸ்தவனாக இருந்துகொண்டே இந்துவாக மதம் மாறிவிட்டதாக பொய் சொன்னார். வரதட்சணை கேட்டு என்னை தினந்தோறும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு ஷர்மிளா தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

ஷர்மிளா கொடுத்த புகார் மனு தொடர்பாக அவரது வக்கீல் சுதா ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது கட்சிக்காரர் ஷர்மிளா கணவரால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். சுயமரியாதை திருமணம் என்பது இந்து பெண்ணுக்கும், இந்து மாப்பிள்ளைக்கும் தான் நடக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் இந்து பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.

ஷர்மிளாவின் கணவர் சாமுவேல் வழுக்கை தலை உடையவர் ஆவார். ஷர்மிளாவை பெண் பார்க்க வந்தபோது தலையில் தொப்பியோடு வந்துள்ளார். ஏழுமலையானுக்கு மொட்டை போட்டுள்ளதால் தலையில் தொப்பி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். திருமணத்தின்போது தலை நிறைய முடியோடு வந்துள்ளார்.

முதலிரவில் அவரது முடியின் ரகசியம் அம்பலமாகிவிட்டது. அவர் தலையில் `விக்' அணிந்து ஏமாற்றி உள்ளார். முதலிரவின்போது `விக்'கை கழற்றி வைத்துவிட்டு வழுக்கை தலையோடு இருந்துள்ளார். முதலிரவின்போதே சாமுவேலின் வழுக்கை தலையை பார்த்து, ஷர்மிளாவின் வாழ்க்கையும் வழுக்க ஆரம்பித்துவிட்டது. சாமுவேல் செய்த கொடுமையால் கர்ப்பமாக இருந்த ஷர்மிளாவின் வயிற்றில் இருந்த குழந்தையும் `அபார்ஷன்' ஆகிவிட்டது.

கிறிஸ்தவராக இருந்துகொண்டு இந்து என்று பொய் சொல்லிக்கொண்டு சுயமரியாதை திருமணம் நடத்தி மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. சாமுவேல் வடமாநில பெண் ஒருவரை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த 2 மாத காலமாக தீர ஆலோசித்து தான் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சாமுவேல் செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வாங்கி கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இவ்வாறு வக்கீல் சுதா ராமலிங்கம் தெரிவித்தார்.

ஷர்மிளா கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தும்படி வரதட்சணை கொடுமை தடுப்பு உதவி கமிஷனர் விமலாவுக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அரசு வக்கீலிடம் சட்ட ஆலோசனை பெற்று இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது.

============

இதுபோல் பரவலாக மேல் மட்டங்களில் 498A கேசுகள் மேலும் பற்பல குற்றப் பிரிவுகளோடு சேர்த்துப் போடப்பட்டு ஜெகஜ்ஜோதியாக வலம் வந்தால்தான் ஒரு விமோசனம் கிட்டும்! தொடரட்டும் வி.ஐ.பி 498A கேசுகள்!

=====================

தினமலர் அளித்துள்ள மேலதிக விவரங்கள்:-

சுட்டி: http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=4887

சென்னை :வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், என்னை அடித்து கொடுமைப்படுத்தினர். ஐ.பி.எஸ்., அதிகாரியான என் கணவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, முத்தமிழ் நகர், வடக்கு அவென்யூ சாலையில் வசிக்கிறார் எம்.பி.ஏ., பட்டதாரி சர்மிளா. சென்னையில், கரூர் வைசியா வங்கியில், உதவி மேலாளராக வேலை பார்க்கிறார்.

அவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் கணவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாமுவேல். ஜம்மு - காஷ்மீர் ஒதுக்கீடு ஐ.பி.எஸ்., அதிகாரி. ஜம்முவில் 13வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வருகிறார்.அவர், கிறிஸ்தவ யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். நான் இந்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவள். இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் சுயமரியாதை திருமணமாக, இந் தாண்டு பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் எங்கள் திருமணம் நடந்தது.சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில், எங்கள் முதல் இரவு நடந்தது. ஓட்டல் அறைக்கு நள்ளிரவில் குடிபோதையில் வந்த சாமுவேல், என்னையும், என் குடும்பத்தாரையும், ஆபாசமாகவும், கேவலமாகவும் பேசி, "டார்ச்சர்' செய்தார்.

கணவருடன், பிப்ரவரி 14ம் தேதி, டில்லி வழியாக காஷ்மீர் சென்றேன். அங்கும் என்னையும், என் குடும்பத்தாரையும் அசிங்கமாகப் பேசி, அடித்து சித்ரவதை செய்தார்.என் கணவர், போனில் யாரிடமோ, ஒரு பெண்ணை கொலை செய்து அதை விபத்தாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டிருந்தார். அதை நான் கேட்டேன். ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ள அவர், என்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார் என்ற பயம் வந்து விட்டது. சென்னையில் உள்ள என் குடும்பத்தாரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளி விடுவதாக மிரட்டினார்.என் கணவர் சாமுவேல், மனநோயாளி போல் என்னிடம் நடந்து கொண்டார். கடும் குளிர்பிரதேசமான காஷ்மீரில், படுக்கையில் இருந்த என்னை நள்ளிரவில் கீழே தள்ளி விட்டுள்ளார். காய்ச்சல், குளிர் ஜுரத்தில் படுத்தேன். மருத்துவ சிகிச்சை பெறக் கூட அனுமதிக்கவில்லை. இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் பல மணி நேரம் என்னை நிற்க வைத்து கொடுமை படுத்தினார்.

இதற்கிடையே, நான் சென்னைக்கு திரும்பி விட்டேன்.என் பெற்றோரிடம், வரதட்சணை அதிகமாக வேண்டும் என கேட்டு மிரட்டினார். மதுரையில் உள்ள போலீஸ் கமிஷனர், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், தன் குடும்பத்தினருக்கு நெருக்கம் என கூறி மிரட்டினார். என்னை ஏமாற்றி மோசடியாக திருமணம் செய்து, என் நகைகளை அபகரித்துக்கொண்ட ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

கமிஷனர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை கமிஜனர் ஆசியம்மாளிடம், இந்த புகாரை சர்மிளா அளித்தார். அவர் மனு, குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மனைவிக்கு கள்ளத்தொடர்பால் விவாகரத்து முடிவு : ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் வாக்குமூலம்:

சர்மிளா புகார் கொடுத்த தகவல் அறிந்து வந்த சாமுவேல், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் கூறியதாவது:

எனது மனைவி சர்மிளா, பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். எனது மனைவிக்கு வெறொருவருடன் தொடர்புள்ளது. அதை மறைக்கத்தான் இப்படி என் மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார்.மனைவியை விவாகரத்து செய்ய, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிபதியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். என் மீதான புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவுள்ளேன். இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:

சாமுவேல், 1999ம் ஆண்டு நேரடியாக தேர்வான ஐ.பி.எஸ்., அதிகாரி என தெரியவந்துள்ளது. அவரது மனைவி சர்மிளா கொடுத்துள்ள புகார், மத்திய குற்றப்பிரிவில் உள்ள வரதட்சணை தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.புகார் கொடுத்த சர்மிளாவை அழைத்து விசாரிக்க, அப்பிரிவின் உதவி கமிஷனர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாமுவேலிடமும் விசாரிக்க வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு உள்ளதால், கோர்ட் முடிவை பொறுத்து வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

==========

அதுசரி. சாதாரண கணவனாக இருந்தால் ஒரு விசாரணையுமின்றி புகார் கொடுத்தவுடனேயே கைது செய்து விடுவார்கள். இப்போது விசாரனை செய்கிறார்களாம்!!

நடக்கட்டும். எப்படியாவது இந்தப் பொய்க் கேசுச் சட்டங்களிலிருந்து அப்பாவி கணவர்களுக்கு விமோசனம் கிட்டினால் சரி!

8 மறுமொழிகள்:

')) said...

ஐயோ இப்பவே கண்ணக் கட்டுதே...

என்ன இருந்தாலும் என்னோட 498ஏ டார்லிங் புணைந்த வரதட்சணை கொடுமை புகார் போல் வரவே வராது...

')) said...

இது போல் புகார்களை விசாரிக்க இருவரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்... அப்போழுதுதான் யார் அள்ளிவிடுவது, யார் சொல்வது உண்மை என்று கண்டறிய முடியும்...

போலி வரதட்சணை கொடுமை சட்டத்தால் இதுவரைக்கும் சுமார் 1,30,000 ஆயிரம் பெண்கள் விசாரணை கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் (எனது தாயர் மற்றும் எனது தம்பி நண்பருடைய தாயர் உட்பட) மற்றும் இதுபோல் புகார்களில் 2 சதவிதம் புகார்கள் மட்டுமெ உண்மை என்று நீதிமன்றத்தால் தீர்ப்புசொல்லப்படுகிறது என்கின்றது ஒரு ஆய்வு...

பாதிக்கப்பட்ட பெண்களுக்ககா இயற்றப்பட்ட 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டத்தை சில கெடுமதிப்பெண்கள் தவறாகப்பயன்படுத்தி பல பேர் வாழ்கை யை சீரழிக்கின்றனர்.....

')) said...

இதொ திருநெல்வெலியில் ஒர பெண்ணின் அரிய சா(வே)தனை - 15 ஆண்களை ஏமாற்றி மணந்தவர்... படியுங்கள் இந்தச்செய்தியை....


http://thatstamil.oneindia.in/news/2009/09/06/tn-woman-arrested-for-marrying-15-youths.html

')) said...

//திருமணத்துக்கு முன்பு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று எனது கணவர் கூறினார். இருந்தாலும் எனது பெற்றோர் 78 சவரன் நகைகள் எனக்கு வரதட்சணையாக போட்டு அனுப்பினார்கள்.//

வரதட்சணை வேண்டாம் என்றவருக்கு கட்டாயப்படுத்தி வரதட்சணை கொடுக்கப்பட்டிருக்கிறது. 78 சவரன் நகைகள் வரதட்சணையாக போட்டு அனுப்பியிருக்கிறhர்கள். அதுவும் MBA படித்து வங்கியில் பொறுப்பான பதவியில் இருப்பவர் உடந்தையாக இருந்திருக்கிறhர். இதற்குப் பெயர் தான் கூட்டணிக் குற்றமா?
===================
//வக்கீல் சுதா ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுயமரியாதை திருமணம் என்பது இந்து பெண்ணுக்கும், இந்து மாப்பிள்ளைக்கும் தான் நடக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் இந்து பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.//

//அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.//

அமைச்சரும் இதில் உடந்தை என்று வழக்கில் சேர்க்கப்படுவாரா?
=========================
//கடந்த 2 மாத காலமாக தீர ஆலோசித்து தான் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.//

வாய் தவறி உண்மையை சொல்லிவிட்டார் வழக்கறிஞர்!!!!!
==========================
//இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:

ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும்.//

இது போல வாய்ப்பு அனைவருக்கும் கொடுக்கப்படுகிறதா? கண்கள் கட்டப்பட்ட நீதிதேவதைக்கு மட்டும் தான் அது தெரியும்!

')) said...

//இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:

ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும்.//

இதுபோல் வாய்ப்பு எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றதா... மிரட்டி பிச்சையெடுத்துப்பிழைக்கும் அல்லக்கை கட்டபஞ்சாயத்து கூலிகளும் காவல் துறையில் உள்ள கறுப்பு அடுகளாலும் மிரட்டப்பட்டு சில நடத்தை சரியில்லாத பெண்களோடு வாழுமாறு மிரட்டப்படுகின்றனர்...

என்னடைய வழக்கில் என்னுடைய நண்பர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தால் உள்ள சில மிருகங்களினால் கடுமையக தாக்கப்பட்டார்.. இவரை தாக்கிய காரணம் இவர் என் மனைவியன் வாழ்க்கையை (??) கெடுக்கின்றாராம்... இதற்க்குப்பிறகு என் திருமணத்திற்க்கு வந்த பாவத்திற்காக என் தம்பி நண்பருடைய தாயரும் (இவரும் வரதட்சணை கேட்டு எனது மனைவியை(??) கொடுமைப்படுத்தினாராம்) கைது செய்யப்பட்டு 5 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்...

நம் நாட்டில் காசு உள்ளவனுக்கும், மிரட்டி பிச்சைஎடுத்து பிழைக்கும் பொறுக்கிகளுக்கும், துஷ்பிரோயகம் செய்து பிழைக்கும் அதிகாரிகளுக்குத்தான் சட்டம் எல்லாம்... யாராவது ஏமாந்தவன் கிடைத்தால் எதிர் கேள்வி கேட்டால் அடி உதைதான்...

தொடரட்டும் இதுபோல் கூத்துக்கள்...

')) said...

போலீஸ் சூப்பிரண்டு சாமுவேல், காஷ்மீர் மாநிலத்தில் இருந்து விமானத்தில் நேற்று முன்தினம் சென்னை வந்தார். மனைவி ஷர்மிளா கொடுத்த புகாருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சாமுவேலும், இணை கமிஷனர் சக்திவேலை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவும் விசாரணைக்காக உதவி கமிஷனர் விமலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், சாமுவேல் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனையும் நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது தன்மீது கூறப்பட்ட புகாருக்கு கமிஷனரிடம் அவர் விளக்கம் அளித்தார். சாமுவேல் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கள்ள காதல்

நான், எனது மனைவியிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டேன். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற விஷயமும், எனது தலை வழுக்கை தலை என்பதும் எனது மனைவிக்கு ஏற்கனவே தெரியும். எனது மனைவி திருமணத்துக்கு முன்பே அவரோடு கல்லூரியில் படித்த வாலிபர் ஒருவரோடு காதல் வயப்பட்டுள்ளார். அந்த காதல் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்தது. குறிப்பிட்ட அந்த வாலிபர் எனது மனைவியை சந்திக்க காஷ்மீருக்கே வந்துவிட்டார். எனது மனைவியின் கள்ள காதலை கண்டித்ததால் என்மீது அபாண்டமாக குற்றம் சுமத்த ஆரம்பித்துவிட்டார்.

திருமணமான ஒரு மாதத்தில் அவர் கர்ப்பம் அடைந்தார். அந்த கர்ப்பம் திருமணத்துக்கு முன்பே உருவாகியுள்ளது. அந்த கருவை கலைத்துவிட்டு வரும்படி நான் பெருந்தன்மையாக கூறினேன். விஷயம் வெளியில் தெரிந்துவிட்டதால் எனது மனைவி ஆத்திரத்தோடு அபாண்டமாக பழி சுமத்தியுள்ளார்.

எனது மனைவியும், நானும் ஒருங்கிணைந்த விருப்பத்தோடு விவாகரத்து பெற முடிவு செய்தோம். விவாகரத்து தர தயார் என்று எனது மனைவியே செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் எனக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் நான் வழக்கு போட்டுள்ளேன். அந்த வழக்கை முறியடிப்பதற்காக வேண்டுமென்றே எனது மனைவி பொய்யான புகாரை கொடுத்துள்ளார். எனக்கும், எனது மனைவிக்கும் உள்ள பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் கோர்ட்டு எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

ஷர்மிளாவிடம், உதவி கமிஷனர் விமலா நேற்று 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையின்போது ஷர்மிளா தெரிவித்த தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. சாமுவேலையும் விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்தனர். போலீஸ் நிலையத்தில் ஏராளமான டி.வி. கேமராமேன்களும், பத்திரிகை புகைப்படகாரர்களும் கூடி நின்றதால் சாமுவேல் விசாரணைக்கு வரவில்லை. அவர் சார்பில் வக்கீல் ஒருவர் மட்டுமே ஆஜரானார். சாமுவேல் பத்திரிகைகாரர்கள் யாரும் இல்லாத நேரத்தில் விசாரணைக்கு வருவார் என்று அவரது வக்கீல், போலீசாரிடம் தெரிவித்தார்.

')) said...

update

http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=4903

படுக்கையறை ரகசியங்களை நண்பரிடம் பகிர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி

')) said...

ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான புகார்: அடக்கி வாசிக்க போலீசார் முடிவு
செப்டம்பர் 10,2009, தினமலர்.

ஐ.பி.எஸ்., அதிகாரிக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான பிரச்னை, ஜம்மு-காஷ்மீரில் நடந்துள்ளது. அதனால், மனைவியை துன்புறுத்தியதாக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் வங்கி அதிகாரியாக பணிபுரியும் பெண் சர்மிளா. இவரும் காஷ்மீரில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் சாமுவேலுவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். கொஞ்ச நாட்கள் ராமநாதபுரத்திலும், மதுரையிலும் தங்கிருந்த அவர்கள், பிறகு சென்னைக்கு வந்து ஓட்டலில் தங்கியுள்ளனர். அதன்பின் காஷ்மீர் சென்றுள்ளனர். சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்த சர்மிளா , "சென்னையில் தங்கியிருந்தபோது, எனது கணவர் கொடுமைப்படுத்தினார்' என, தெரிவித்திருந்தார்.

உடன் ஜம்முவில் இருந்து சென்னை வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், தன் விளக்கத்தை வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசில் அளித்தார். இதிலிருந்தே, சாமுவேலும், சர்மிளாவும் பல இடங்களில் தங்கியிருந்துள்ளது தெரிகிறது. அப்படியானால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து, அதை ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு அனுப்ப வேண்டும். ஜம்முவிலும் அவர்களுக்குள் பிரச்னை நடந்துள்ளது. இப்பிரச்னைக்கு கிடையே, "எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது' என அறிவிக்க கோரி, சென்னை கோர்ட்டில் ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் மனு தாக்கல் செய்தார்.

ஜம்முவில் இருந்து சாமுவேல், மனைவி புகாரால் சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதே போல், மனைவி மீதான விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஜம்முவில் வழக்கு தொடர்ந்தால், சென்னையில் உள்ள சர்மிளா, அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குடும்பநல ஆலோசனை மையத்தில் அணுகி தீர்வு காண, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீர் ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்தால், அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான விவகாரத்தை தற்போதைக்கு சென்னை போலீசார் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளனர்.