வரதட்சணை கொடுமை என்று சொல்லி உள்ளே தூக்கி போட்டு விடுவேன்!

சிம்லாவில் 2 நாட்கள் நடக்கிறது
மனைவியின் கொடுமைக்கு ஆளான கணவர்களின் மாநாடு
சென்னை ஆண்களும் பயணம்

செய்தி - தினத்தந்தி

சிம்லா, ஆக.15-

மனைவியின் கொடுமைக்கு ஆளான கணவர்களின் மாநாடு சிம்லா நகரில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சென்னையை சேர்ந்த ஆண்களும் கலந்து கொள்கிறார்கள்.

வரதட்சணை கொடுமை

`கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்று சொல்லிக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. கணவன் அடித்தாலும், உதைத்தாலும் அவன் காலடியிலேயே கிடந்து வாழ்க்கையையே தியாகம் செய்யும் பெண்கள் வாழ்ந்த காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

இப்போதெல்லாம், "உனக்கும் எனக்கும் பிடிக்கவில்லையா? வா, விவாகரத்து செய்து கொள்வோம்'' என்று கூறி கணவனை கோர்ட்டுக்கு இழுத்து சட்டரீதியாக அவரை விட்டு பிரிந்து செல்லும் துணிச்சல் பெண்களுக்கு வந்து விட்டது. இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்கள் கூறும் காரணம், `வரதட்சணை கொடுமை', `அவரோடு இனிமேலும் என்னால் சேர்ந்து வாழ முடியாது' என்பதுதான்.

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள்

சமீபத்திய சில ஆண்டுகளாக இதுபோன்ற விவாகரத்துகள் அதிகரித்து உள்ளன. கணவன் சேர்ந்து வாழ விரும்பினாலும். சில பெண்கள் இதுபோன்ற காரணங்களை கூறி வாழ்க்கையில் இருந்து அவரை `கழற்றி' விடுவதில் வெற்றி பெற்று விடுகிறார்கள்.

கையை ஓங்கினால் கூட, "வரதட்சணை கொடுமை என்று சொல்லி உள்ளே தூக்கி போட்டு விடுவேன்'' என்று கணவனை மிரட்டும் துணிச்சல் பெண்களுக்கு வந்து விட்டது.

இப்படி மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் பல்வேறு மாநிலங்களிலும் ஒன்று சேர்ந்து சங்கங்களை தொடங்கி தங்களுடைய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள்.

சிம்லா நகரில் மாநாடு

மனைவிமார்களின் கொடுமைக்கு ஆளான கணவர்களின் மாநாடு இமாசலபிரதேச மாநிலம் சிம்லா நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூர், மும்பை, ஐதராபாத், டெல்லி, சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த தகவலை குமார் வி.ஜகீதார் என்பவர் நேற்று சிம்லா நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். இவர் பெங்களூர் நகரில், `குழந்தைகள் மீது கணவன்-மனைவி இருவருக்கும் உள்ள சம உரிமைக்காக பாடுபடும் சங்க'த்தின் தலைவராக இருந்து வருகிறார்.

தற்போதுள்ள வரதட்சணை கொடுமை சட்டம் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் குழந்தைகள் தாயிடமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்படுவதை சில பெண்கள் தங்களுக்கு சாதமாக எடுத்துக் கொண்டு கணவரை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் கூறினார். கோர்ட்டுக்கு போனால் அவமானப்பட்டு விடுவோம் என்று கருதி பல ஆண்கள் மனைவியின் இத்தகைய கொடுமையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதாகவும் ஜகீர்தார் தெரிவித்தார்.

மத்திய மந்திரியிடம் மனு

இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஆண்கள்தான் என்றும், அவர்கள் புகார் கொடுத்தால் போலீசார் அதை பதிவு செய்வது இல்லை என்றும் கூறிய அவர், ஆண்-பெண் இருபாலாருக்கும் சமமாக இருக்கும் வகையிலான விவாகரத்து சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரி மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லியிடம், பாதிக்கப்பட்ட கணவன்மார்களின் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

போகிற போக்கை பார்த்தால், `சிவம் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும் போலிருக்கிறது.
========================

இந்த செய்தியையும் வாசித்துவிடுங்கள்!

========================

வரதட்சணை கொடுமை கணவன்,மாமனார் கைது (செய்தி - தினமலர்)

திண்டுக்கல்: ஆத்தூர் அருகேயுள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி மகள் தேவி(24). இவருக்கும் உடுமலைப் பேட்டையை சேர்ந்த முத்துப்பாண்டி(29)க்கும் கடந்த 2.6.2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. 20 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். தற்போது 70 ஆயிரம் ரூபாயும், 20 பவுன் நகையும் கேட்டு மனைவியை துன்புறுத்தியுள்ளனர்.மாமனார் தேவராஜ்(54), மாமியார் பாண்டியம்மாள் உட் பட 9 பேர் மீது தேவி நிலக்கோட்டை அனைத்துமகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கணவன்,மாமனாரை கைது செய்தனர்.

2 மறுமொழிகள்:

')) said...

ஒன்று அருவா வெட்டு இன்னொன்று தற்கொலை... வாழ்க கள்ளக்காதல் வளர்க வன்முறை வளர்க இந்திய கலா(யாரு இந்த கலா??)ச்சாரம் வாழ்க...

1.மனைவியுடன் கள்ளத்தொடர்பு தபால் அதிகாரிக்கு வெட்டு

http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Chennai#215718


2.கள்ளக் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புஇன்ஜினியரிங் மாணவி தற்கொலை

http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Kanchipuram#215768

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
seidhivalaiyam@gmail.com