14-02-2009 அன்று பெங்களூரில் தர்ணா

இந்திய குடும்ப நல வாழ்வை பேணிக்காக்கும் அமைப்பினர் (Save Indian Family Foundation) வரும் 14-02-2009 அன்று பெங்களூரில் ஒரு தர்ணா நடத்த இருக்கிறார்கள்.

இடம்: எம்.ஜி சாலை - மகாத்மா காந்தி சிலை எதிரில்

நேரம்: காலை 10-00 மணீ முதல் பிற்பகல் 1-00 மணி வரை

பங்கு கொள்வோர்: சட்டபூர்வ வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்தக் கொடுமையை எதிர்க்கும் நல்மனது படைத்தவர்கள்.

இவர்களில் பொறியாளர்கள், மென்பொருளாளர்கள், வக்கீல்கள், எழுத்தர்கள், டாக்டர்கள், அரசு பணியாளர்கள், என்.ஆர்.ஐ-க்கள், சார்ட்டட் அக்கவுண்டண்ட்கள், வணிகத்துறையினர், பெண்கள் இன்னும் பலர் அடங்குவர்

இந்த தர்ணா எவ்விதக் கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்படுகிறது?

  1. ஆண்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு (பெண்களுக்கு உள்ளது போலவே) ஒரு தேசிய ஆணையமும் ஆண்கள் நல்வாழ்வு அமைச்சகமும் வேண்டும்
  2. தேங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான குடும்ப வழக்குகளை மேலும் நிறைய நீதிபதிகளை நியமித்தும், மாலை நேர நீதிமன்றங்களை அமைத்தும் விரைவில் தீர்க்க வேண்டும்
  3. மக்களின் - முக்கியமாக இளைஞர்களின் - வாழ்வைப் பெருமளவில் பாதிக்கும் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அவர்களுடைய் பங்களிப்பையும் பெறவேண்டும்.
  4. தற்போது பெண்ணிற்கு மட்டும் மேன்மை தந்து ஆண்களை ஒடுக்கும் சட்டங்களை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகப் பொருந்தும்படி மாற்றியமைக்க வேண்டும். அதற்கு முன்னோடியாக “மனைவி”, “கணவன்” போன்ற சொற்களை நீக்கிவிட்டு இருவருக்கும் பொருந்தும் “வாழ்க்கைத் துணை” அல்லது “துணைவர்” (spouse) என்றே குறிப்பிட வேண்டும்.
  5. மனைவி கணவனிடமிருந்து தற்போது பலவித சட்டப் பிரிவுகளில் ஒரே நேரத்தில் ஜீவனாம்சம்/மானியம் பெறும் அமைப்பு இருக்கிறது. இதை முறைப்படுத்தி, ஆண், பெண் இருவரும் வேலை பார்த்து நல்ல ஊதியம் பெற்று வரும் மாறுபட்ட சமூக நிலையை கருத்தில் கொண்டு சட்டங்களில் முறையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
  6. ”குடும்ப வன்முறைச் சட்டம்” தற்போது ஒருதலைப் பட்சமாக இருக்கிறது. அதில் வன்முறை என்பது (மனத்தளவிலோ, உடலளவிலோ) கண்வன் தான் செய்வான் என்று எழுதப் பட்டிருக்கிறது. அதை நியாயமான முறையில் மாற்றி, மனைவி தன் கணவன் மற்றும் மாமியார், மாமனார்க்குச் செய்யும் கொடுமைகளையும் அதில் உள்ளடக்கி, அத்தகைய கொடுமைகளுக்களுக்கான நிவாரணங்களையும் அச்சட்டத்தில் சேர்க்கவேண்டும்.
  7. குடும்ப விவகாரங்களில் போலீஸ் தலையிடுதலை நிறுத்தவேண்டும். அவர்கள் தற்போது செய்வதுபோல் குடும்பப் பிரச்னைகளில் நுழைந்து அறிவுரைகளோ, பரிந்துரைகளோ, பஞ்சாயத்தோ அளிக்கக்கூடாது
  8. பச்சிளங் குழந்தைகளின் காப்புப் பொறுப்பை நிர்ணயிக்கும் போது அக் குழந்தைகளை நேரிடையாக விசாரிக்கும் வழக்கத்தை நிறுத்தவேண்டும். இந்தச் செயல் அந்த பிஞ்சு மனங்களை நோகச் செய்யும் கொடூரமான ஒரு செயல். சூதறியா அக்குழந்தைக்கு தாயும் தந்தையும் சமம் தான். அந்த நிலையில் அக்குழந்தையிடம், “நீ தாயிடம் இருக்க விரும்புகிறாயா, தந்தையிடமா?” என்று விசாரிக்க முயலும் போது, அந்த நேரத்தில் காப்புரிமை பெற்றுள்ள பெற்றவர் மற்றவருக்கு எதிராக குழந்தையின் மனத்தைத் திருப்ப எத்தனிக்கும் அபாயம் உள்ளது.
  9. குற்றவியல் சட்டஙகளின் அடிப்படையில் வழக்கு நடக்கும்போது பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கிரிமினல் வழக்குகளை சட்டப்படி புகார்கள் உணமையா பொய்யா என்று தீர விசாரித்து அதன்படி தீர்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அவற்றில் எவ்வித சமரச இணக்கமும் மேற்கொள்ளக் கூடாது.
  10. பலவித சூழல்களின் தாக்கத்தால் நம் நாட்டில் தற்போது குடும்பச் சச்சரவுகள் மிக அதிகமாகி விட்டன. அதனால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருக்கிறது. இதற்குத் தீர்வு காணவும், நம் நாட்டின் பண்பாட்டின் அடிப்படையில் இணக்கமான குடும்ப வாழ்வு முறையை வளப்படுத்தவும் ஒரு தேசிய அளவிலான கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்தி உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.
  11. வருமான வரி விதித்தலில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் இருபாலருக்கும் ஒரே விதமான வரி விகிதம் இருக்கவேண்டும்..
  12. தற்போது நீதிமன்றங்களும், காவல் துறையும், நடுவர்களும் ஆண்களுக்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் என்றாலே கிரிமினல்கள் போலவும், பெண் என்றாலே ஆண்களால் கொடுமைப் படுத்தப்பட்டவர்கள் போலவும் ஒரு கருத்தாக்கம் அவர்கள் மனத்தில் ஆழப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மை நிலைக்கு மாறாக உள்ளது என்பதால், அத்துறைகளைச் சார்ந்தவர்களை ஆண்களுக்கும் இணக்கமான மனப்பான்மையையுடன் அவர்களின் பிரச்னைகளை அணுகும்படியான மனமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் (sensitization of their minds towards the problems of men). தற்போதுள்ள ஆண்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்.
  13. மணமுறிவு நிகழும்போது ஜீவனாம்சம்/மானியம் போன்ற பணம் சார்ந்த ஈட்டுத் தொகை வழங்கும் முறையை நிறுத்த வேண்டும். தவிர்க்க இயலாத சில கட்டங்களில்தான் இவை அளிக்கப்பட வேண்டும். அதுவும் மாறுபட்ட பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, கணவன், மனைவி இருவருடைய உண்மையான வருமானத்தையும் கண்டறிந்து அதற்கேற்ப நடுநிலையுடன் வழங்கப்பட வேண்டும்.

அனைவரும் வருக!