போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு

இது போதாது. போலீஸ் ஐ.ஜி, டிஜிபி, நீதிபதிகள், அமைச்சர்கள், பிரதம மந்திரி இப்படி அனைவர் மீதும் இந்த 498A கேசுகள் பதியப்பட வேண்டும். அப்போதுதான் ஆட்சியில் உள்ளவர்கள் இதன் தவற்றைப் புரிந்து கொள்வார்கள்.

நானி பால்கிவாலா ஒருமுறை சொன்னார்: “India has too many laws, but too little justice" - என்று. ஒன்றின்மெல் ஒன்றாக கடுமையான சட்டங்களை அடுக்கிக்கொண்டு போனால் நல்லது நடக்காது, பொய் வழக்குகள் பெருகி இடைத் தரகர்கள்தான் காசு பார்ப்பார்கள். வீட்டின் அடுக்களையிலும் படுக்கையறையிலும் நடக்கும் பிரச்னைகளுக்கு காக்கிச் சட்டையும் கருப்புக் கோட்டும் தீர்வுகாண முடியுமா?

இப்போது செய்தியை படியுங்கள்:-

ரூ.11/2 லட்சம் கேட்டதாக மனைவி புகார்:போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு

வாடிப்பட்டி, மே.23- 2009. செய்தி: தினத்தந்தி

மதுரையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வருவதாக மனைவி புகார் செய்ததின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை பல்கலை நகரைச்சேர்ந்தவர் ஆஷா அருள்மொழி (வயது 31). இவரது கணவர் பொன்ரகு (42). இவர் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது விழுப்புரம் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் பொன்ரகு இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் சமயநல்லூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் ஆஷா அருள்மொழி ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் ”திருமணமானதில் இருந்து தன்னிடம் வரதட்சணை கேட்டு பொன்ரகு கொடுமை செய்து வந்தார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அந்த பெண்ணையே மறுமணம் செய்யப்போவதாக என்னை மிரட்டினார்.

மேலும் பொன்ரகுவின் சகோதரிகள் ஞானம் (50), விஜயா (55) ஆகியோரை வீட்டுக்கு அடிக்கடி வரவழைத்து என்னை திட்டி சித்ரவதை செய்து வந்தார். மேலும் வரதட்சணையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்தினர். பொன்ரகுவின் தாயார் அன்னத்தாய் (84), தந்தை பொன்னையா (85) ஆகியோரும் இதற்கு உடந்தையாக இருந்து வந்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து வரதட்சணை புகார் கூறப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு, அவரது சகோதரிகள் மற்றும் தாய், தந்தை உள்பட 5 பேர் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

(அவர்களை கைது செய்தார்களா என்று தெரியவில்லை. சாதாரண மனிதர்களாக இருந்தால் இத்தகைய செய்திகளில் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று முடியும். இந்த 498A சட்டத்தின்படி உடனே கைது செய்யலாம். ஜாமீன் கிடையாது. அதாவது புகாரில் பெயர் குறிப்பிட்டப்பட்டவர்கள் அனைவர் மேலும் விசாரணை ஏதுமின்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யலாம், செய்துகொண்டு வருகிறார்கள். சம்பத்தமே யில்லாமல் மன்மோஹன் சிங்கும் சேர்ந்துகொண்டு என்னை வரதட்சணைக் கொடுமை செய்தார்கள் என்று புகார் கொடுக்கலாம். வழக்குப் பதிவு செய்வார்கள் - அவரை கைது செய்வார்களா என்பது தெரியாது!!)