இப்படியும் சில குடும்பங்கள்

பொதுவாக இட உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே வாடகைக்கு
குடியிருப்பவர்கள் கோர்ட் உத்தரவுபடி வெளியேற்றப்படுவர். ஆனால், மிகவும் அரிதாக,
பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மகன் மற்றும் மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்ற
கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பையில் புறநகர் பகுதியான விலே பார்லியில் தங்கியிருக்கும் வயதான தம்பதிகளுக்கு ஒரு மகனும், மருமகளும் உள்ளனர். அவர்கள் தங்கி இருக்கும் வீடு வயதான தாய்க்கு சொந்தமானது. மகன் மற்றும் மருமகள் இடையே தினமும் சண்டை தான். ஒரு கட்டத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வயதான தம்பதியின் மகன் கோர்ட்டுக்கு சென்று விட்டார். அந்த வீட்டில் இருந்து மனைவியை வெளியேற்ற வேண்டும் என்ற மகனின் கோரிக்கையை கோர்ட் நிராகரித்து விட்டது. இதன் தொடர்ச்சியாக மாமியாருக்கும், மருமகளுக்கும் தினமும் மோதல் தான். ஒருவர் மீது மற்றொருவர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்து கொண்டனர். ஆனால், பிரச்னை தான் தீரவில்லை. இறுதியில் வயதான பெண், வக்கீல் நிதின் வாட்கார் என்பவர் உதவியுடன் செசன்ஸ் கோர்ட் கதவுகளை தட்டினார்.

"மகன் மற்றும் மருமகள் தினமும் போடும் சண்டையால் வயதான தம்பதியாகிய எங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே, மகன் மற்றும் மருமகளை வீட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.வயதான தம்பதிகளில் பெண்ணுக்கு 76 வயதாகிறது; ஆணுக்கு 80 வயதாகிறது. அவர்கள் கோர்ட் கதவுகளை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களின் பெயர்களை வெளியிடவும் மறுப்பு தெரிக்கப் பட்டது. இந்த வழக்கை கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஆர்.பி. மாலிக் விசாரணை செய்தார். அந்த வீட்டில் இருந்து மகனும், மருமகளும் நான்கு வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று இடைக்கால உத்தரவும் பிறப்பித்தார். கோர்ட் உத்தரவின் பேரில் மகனும், மருமகளும் வெளியேற்றப்படுவது மிகவும் அரிதான ஒன்று என்று வக்கீல்கள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.