ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


மனைவியை பிரிப்பதாக கணவரிடமும், கணவரை சேர்த்து வைப்பதாக மனைவியிடமும் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு


சென்னை, ஜுலை.2-
சென்னையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.


கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது


சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சியாமளா. இவரது கணவர் பெயர் சதீஷ்குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கும், சியாமளாவுக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சதீஷ்குமார் லண்டனில் வேலை பார்க்கிறார். இனிதாக இல்லற வாழ்க்கை நடத்திய இவர்களுக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சதீஷ்குமார், இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், சியாமளா அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி (வயது 56) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். தினமும் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, ஜாமீன் நிபந்தனைப்படி கையெழுத்து போட்டு வருகிறார்.


லஞ்ச புகார்


இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, சதீஷ்குமாரிடமும், சியாமளாவிடமும் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சதீஷ்குமாரை சேர்த்து வைப்பதாக சியாமளாவிடமும், சியாமளாவை பிரித்து வைப்பதாக சதீஷ்குமாரிடமும் பணம் கேட்டு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சியாமளாவிடம் ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு, பின்னர் ரூ.10 ஆயிரமாவது தரவேண்டுமென்று ராஜலட்சுமி மிரட்டியுள்ளார்.


இது தொடர்பாக சியாமளா, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு இயக்குனர் நடராஜன் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சூப்பிரண்டு ஆசியம்மாள், துணை சூப்பிரண்டு அலிபாஷா ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ் ஜோசப், வேதரத்தினம் ஆகியோர் இதுதொடர்பாக விசாரித்தார்கள்.


கைதானார்


நேற்று சியாமளாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னை நகரில் இந்த ஆண்டு இதுவரை லஞ்ச புகாரில் 3 இன்ஸ்பெக்டர்களும், 2 சப்-இன்ஸ்பெக்டர்களும், 2 போலீஸ் ஏட்டுகளும் கைதாகியுள்ளனர்.


~ செய்தி: தினத்தந்தி. படம்: Times of India (02-07-2008)


மனைவி புகார் கொடுத்தால் போதும்; கணவன் கைது செய்யப்படுவான் என்னும் சட்ட நடைமுறை தொடர்ந்து இருக்கும் வரை இதுபோன்ற பல அராஜகங்களை வரும் நாட்களில் எதிர் பார்க்கலாம்.


ஆண்களே, இப்ப்டியும் ஒரு திருமணம் உங்களுக்குத் தேவையா!!

கோபம் கொண்டு கணவன் பேசாவிட்டாலும் சட்டம் பாயும்

"மருமகளுக்கு மாமியார் சாப்பாடு தரவில்லை என்றால் கூட அதை வன்முறையாகக் கருதி, வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் மாமியார் மீது நடவடிக்கை எடுக்கலாம்,'' என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சமூக நலத்துறை மற்றும் அண்ணா மேலாண்மை மையம் சார்பில், "குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம்' பயிற்சி துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. அண்ணா மேலாண்மை மையத்தின் இயக்குனர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். சமூக நலத்துறையின் இயக்குனர் மணிவாசன் பேசுகையில், "குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தை தமிழக அரசு 2006ம் ஆண்டு கொண்டு வந்தது.

மனைவியை கணவர் அடித்தார் என்பதும் வன்முறை தான். மனதளவில் மனைவியை துன்புறுத்துவதும் வன்முறை தான். மாமனார், மாமியார் கொடுமையிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இச்சட்டம் வழிகாட்டுகிறது,'' என்றார்.

மாநில மகளிர் ஆணையத் தலைவி ராமாத்தாள் பேசுகையில், "மனைவியை அடிப்பதும், உதைப்பதும் வன்முறை தான். அதேபோல மனைவியிடம் கோபப்பட்டு அவருடன் நான்கு நாட்கள் பேசாமல், சாப்பிடாமல் சில கணவர்கள் இருப்பார்கள். இதுவும் வன்முறையாக எடுத்துக் கொள்ளப்படும்,'' என்றார்.

மனைவியிடம் கோபம் கொண்டு கணவன் பேசாமல் இருந்தால் அது வன்முறை. உடனே கணவனை கைது செய்யலாம். ஆனால் கண்வன் மீது கோபம் கொண்டு மனைவி பேசாமல் இருந்தாலோ உணவு இட மறுத்தாலோ அது குற்றமேயில்லை. என்ன நியாயமடா இது!

மனைவி ஈமெயில் அனுப்பினால் கணவன் கைது!

கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஸ்வாதி என்பவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவருக்கும் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கும் சென்ற ஃபெப்ரவரியில் திருமணம் நடந்து இருவரும் அமேரிக்காவில் வசிக்கின்றனர். கணவர் இம்மாதம் 12-ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு தன் உறவினர் ஒருவரின் மரணத்தின் காரணமாக வந்திருக்கிறார். உடனே அவருடைய மனைவி ஸ்வாதி போலீஸுக்கு ஒரு ஈமெயிலில் கணவர் வரதட்சிணை கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த கணவரையும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரையும் இரவு 8 மணிக்கு கைது செய்துவிட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் கொடுத்துள்ள புகாரில் அவர் அமேரிக்காவில் கொடுமை செய்யப்பட்டதாகவும் ,அங்கு கடுமையாக தாக்கப் பட்டதாகவும், தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகவும், இன்னும் என்னென்ன எழுதினால் சட்டத்தின் அத்தனை பிரிவையும் போட்டுத் தாக்க முடியுமோ எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார். ஆனால் இவையெல்லாம் நடந்ததாகச் சொல்லப்படுகிற அமெரிக்காவில் ஒரு புகாரும் கொடுக்கவில்லை. உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்க மண்ணில் நடந்து அங்கு புகார் கொடுத்திருந்தால் அங்கு கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் பொய் புகார்களை இந்தியாவில் தானே கொடுக்க முடியும்!

ஆகையினால் இந்திய இளைஞர்களே, உங்களுக்கு இப்படியொரு திருமணம்தான் தேவையா?

சிந்தியுங்கள்!

இந்து திருமண சட்டம் குடும்பங்களை உடைக்கிறது - சுப்ரீம் கோர்ட் நீதிபதி!

புதுடெல்லி: இந்து திருமண சட்டம், குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு பதிலாக குடும்பங்களை உடைக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வேதனையுடன் கூறினார்.இந்து திருமண சட்டம் 1955-ம் ஆண்டு இயற்றப்பட்டதாகும். 2003-ம் ஆண்டு வரை இந்த சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள விவாகரத்து தொடர்பான விதிகள் ஆங்கிலேய சட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.
இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் சமீபகாலமாக கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் குவிந்து வருகின்றன. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவிக்கையில் இந்து திருமண சட்டம் குடும்ப அமைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்தவர் கவுரவ் நாக்பால். இவருடைய மனைவி சுமேதா வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பசாயத் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:


குடும்பங்களை உடைக்கும் சட்டம்

குடும்பங்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்து திருமண சட்டம். ஆனால் தற்போது அந்த சட்டம் நேர் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்பங்களை இணைப்பதற்கு பதிலாக உடைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுகிறது. இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளில் வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. திருமணம் ஆகும்போதே விவாகரத்துக்கான முன் எச்சரிக்கை
மனுவையும் தாக்கல் செய்து விடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு பாதிப்பு


கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்து விடுகிறார்கள். ஆனால் இந்த பிரிவால் மோசமாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். அதிலும் பெண் குழந்தையாக இருந்து விட்டால் அதன் எதிர்காலம் அதிகம் பாதிக்கும். அந்த பெண் குழந்தை, திருமணத்தின் போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். எனவே குழந்தைகளின் நலனை நினைத்தாவது தம்பதிகள் தங்களுடைய சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். தங்களை விட தங்கள் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம் என்று உணர வேண்டும்.

முன்னோர்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை வீட்டின் நான்கு சுவர்களுக்கும் தீர்த்துக்கொள்வார்கள். தற்போது இருப்பதைப் போன்ற சிக்கல்களை அவர்கள் சந்தித்தது இல்லை. தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு தொழுநோயோ, மனநிலை பாதிப்போ இருந்தால் விவாகரத்து வழங்கலாம் என்று இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை பல தம்பதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.


இவ்வாறு நீதிபதி பசாயத் கூறினார்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மனைவி

பார்வை பறிபோனது; பிரிந்து சென்றார் மனைவி: துரதிருஷ்டம் துரத்தியவருக்கு கைகொடுத்தது கோர்ட்
------------------------------------------------------------
(செய்தி: தினமலர்)

புதுடில்லி: தவறான ஆபரேஷனால், பார்வையிழந்தவரை விட்டுப் பிரிந்த மனைவி, அவர் மீது வரதட்சணை புகார் கொடுக்க, வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது. அவருக்குக் கைகொடுத்துள்ளது டில்லி ஐகோர்ட்.

டில்லி, மெரவுலி பகுதியை சேர்ந்தவர் கிரிதாரி பண்டாரி. இவருக்கு கண் கோளாறு ஏற்பட்டது. இதற்காக, 2002 மார்ச் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தவறான சிகிச்சையால், பார்வை பறிபோனது. இதனால் வேலையும் பறிபோனது. கிரிதாரி பண் டாரியை துரதிருஷ்டம் துரத்தியது. அவரது மனைவி, ஒரே குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அத்துடன் நின்றுவிடவில்லை; கிரிதாரி மீது வரதட்சணை புகார் செய்தார். இதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகும் கிரிதாரியை விட்டு துரதிருஷ்டம் விலகவில்லை. அவருக்கு கிடைக்கவிருந்த, ராணுவ அமைச்சக கீழ்கோட்ட கிளார்க் பணியும் ரத்து செய்யப்பட்டது. கிரிமினல் குற்றச்சாட்டில், விசாரணையில் உள்ளவருக்கு பணி வழங்க முடியாது என்று ராணுவ அமைச்சகம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். கிரிதாரி வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், அவரை தற்காலிகமாக பணியமர்த்தும் படியும், ஆறு மாதத்துக்குள் வரதட்சணை கொடுமை வழக்குக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆறு மாதத்துக்குள், பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு வழியில்லை என்பதால், டில்லி ஐகோர்ட்டுக்கு சென்றார் கிரிதாரி. செய்யாத தவறுக்காக, வேலை பறிபோனதையும், கிடைக்கவிருக்கும் வேலை ரத்து செய்யப்பட்டது குறித்தும் முறையிட்டார்.

விசாரணையின் போது, தனது குழந்தையை அவ்வப்போது பார்க்க அனுமதித்தால், பரஸ்பர விவாகரத்துக்கு தயார் என்று உருக்கமுடன் தெரிவித்தார். இவ் வழக்கை, மனிதநேயத்துடன் அணுக கோர்ட் முடிவு செய்தது. கிரிதாரியின் பணியிடத்தை, காலியாக வைத்திருக்கும் படி ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட டில்லி ஐகோர்ட், போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.டில்லி ஐகோர்ட் சட்ட சேவை கமிட்டி முன், அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதிக்குள், கிரிதாரி, அவரது மனைவி ஆஜராகி, பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புது வாழ்க்கைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கிரிதாரி.

பெண்களையும் தண்டிக்க சட்ட திருத்தம் தேவை

"குடும்ப வன்முறையால் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் போலி புகார் கொடுக்கும் பெண்கள் மீது, நடவடிக்கை எடுக்க, சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, கேரள கோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது.

கேரளாவை சேர்ந்த தம்பதிக்கு 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் சிறிது காலத்துக்கு, வெளி மாநிலத்தில் வசித்தனர். கேரளாவில் உள்ள தனியார் கல்லூரியில், கணவருக்கு விரிவுரையாளர் வேலை கிடைத்தபின் இருவரும் சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். 1998-ம் ஆண்டு, குழந்தை பிறப்பின்மை பிரச்னைக்கு மனைவி சிகிச்சை பெற்றார். இதன் பிறகு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2002-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மனைவிக்கு வேலை கிடைத்தது. இதற்காக அவர் சென்னை சென்றார்.

இதன் பிறகு அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் சிக்கல் உருவானது. 2006-ம் ஆண்டு செப்டம்பரில் அலுவல் பணி காரணமாக மனைவி வெளியூர் சென்றார். உடன் அவரது கள்ளக் காதலனும் சென்றார். இருவரும் போட்ட கும்மாளம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவன உயர் அதிகாரி மொபைல் போனில் மெசேஜ்கள் அனுப்பி கணவருக்கு தெரியப்படுத்தினார்.

இது குறித்து மனைவியிடம், கணவர் விசாரிக்க, பிரச்னை வெடித்தது. அடுத்த நாளே மனைவி தாய் வீட்டுக்குச்ன்று விட்டார். மனைவியின் கள்ளக் காதலனிடம் கணவர் விசாரித்தார். பதிலுக்கு அந்தக் கள்ளக் காதலன் அவரை ஏளனம் செய்தார். இந்த சூழ்நிலையில், வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மனைவி வழக்கு தொடுத்தார். கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் செரியன் குரியகோஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. மொபைல் போனில் வந்த மெசேஜ்களை கணவர் ஆதாரமாக காட்டி, தன் மீது தவறு இல்லை என்பதை நிருபித்தார்.

அந்த மெசேஜ்களை படித்துப் பார்த்த மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. தனது கள்ள உறவை மறைப்பதற்காக மனைவி இது போல செய்து இருக்கிறார். குடும்ப வன்முறையால் கணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சட்டத்தின் கீழ் கணவர் மீது, போலி புகார் கொடுக்கப்படுகிறது. இந்த போக்கினால் இந்தச் சட்டமே கேலிக் கூத்தாகி விடுகிறது.

இதைத் தவிர்க்க, குடும்ப வன்முறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த வழக்கில் கணவர் தான் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு உரிய நிவாரணம் அளிக்க சட்டத்தில் வழியில்லை. சட்டத்தை இயற்றுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையை சிதைப்பவர்களுக்கு தண்டனை அளிக்க குடும்ப வன்முறை சட்டத்தில் வழி வகை இல்லை என்பது துரதிருஷ்டவசமானது.


இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


போராட்டம்!

இந்திய பாரம்பரிய குடும்ப வாழ்வு முறையைக் காக்கும் மையத்தினர் (Save Indian Family Foundation) 23-02-2008 அன்று காலை சென்னை மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ஒரு அமைதிப் போராட்டமும் மனிதச் சங்கிலியும் நிகழ்த்தினர். வரதட்சிணை சட்டத்தின் தவறான செயல்பாட்டினால் பாதிக்கப்பட்ட பல ஆண்களும் பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர். ஒரு பெண்மணி தன் சிறு குழந்தையையும் தூக்கி வந்து நின்றது, அவர் எவ்வளவு தூரம் இந்த சட்ட துன்புருத்தலால் பாதிக்கப் பட்டிருந்தார் எனப்தைக் காட்டியது!

இந்த போராட்டத்தில் வினியோகிக்கப் பட்ட கையேட்டில் கண்டிருந்தவை:-

கோரிக்கைகள்
  1. இருபாலரிடையே சமநிலை வேண்டும்
  2. பெண்களுக்குள்ளது போல், ஆண்களின் மேம்பாட்டுக்காகவும் மத்திய அமைச்சரவையில் தனித் துறை வேண்டும் (Men’s Welfare Department)
  3. சட்டத்தின் செயல்பாட்டில் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான அணுகுமுறை வேண்டும்
  4. பல சட்டங்களினூடே “கணவன்”, “மனைவி” என்று குறிப்பிடப்படும் இடங்களிலெல்லாம் “துணைவர்” (spouse) என்னும் சொல் பயன்படுத்தப்பட வேண்டும்.
  5. தவறு செய்பவர்கள் இருவரில் யாராக இருந்தாலும் சமமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் (Equal Punishment)
  6. பெண்களுக்கும் தங்கள் பிறந்த வீட்டில் சமமான சொத்துரிமை வழங்கப்பட வேண்டும்
=============================

சட்ட தீர்திருத்தங்கள் வேண்டும்

  1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(e) பிரிவு தற்போது பெண்களின் கண்ணியத்தையும் தன்மானத்தையும் பாதுகாக்கிறது. பெண்களுக்கு மட்டும் பொருந்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவு ஆண்களுக்கும் சேர்த்து இத்தகைய பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் மாற்றப்படவேண்டும் (Article 51A(e) of the Constitution of India is to be amended to include men also).
  2. “கொடுமை” என்பது சட்டப்படி எதைக் குறிப்பிடுவது என்பதை தற்போது போலீசும், புகாரளிக்கும் மனைவியும்தான் முடிவு செய்கிறார்கள். நியாயப்படி அதனை உச்ச நீதிமன்றமோ அல்லது சட்டசபை/பாராளுமன்றமோதான் தீர்மானிக்கவேண்டும். அதுவரை 498அ பிரிவின் செயலாக்கம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்
  3. பாராளுமன்ற விளக்கங்கள் சட்டமாகாது. அத்தகைய விளக்கங்கள் தெளிவில்லாமலும், குழப்பங்கள் நிறைந்தும் இருப்பதால் அவை உச்ச நீதிமன்றத்தால் சட்டப்படி செல்லத்தக்கவையல்ல என்று தீர்வு சொல்லப்படவேண்டும்.
  4. வரதட்சிணை ஒழிப்புச் சட்டமும் கொடுங்கோன்மையான ‘498அ’ பிரிவும் ஸிவில் சட்டப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவற்றின் மேல் நடவடிக்கை “Civil Procedure Code”-படி அமைதல் வேண்டும்.
  5. சட்டப்பிரிவு ‘498அ’ உடனடி ஜாமீன் பெறத்தக்கதாகவும் (bailable), நேரடிக் குற்றமாகக் கருதப்படாததாகவும் (Non-Cognizable) மாற்றப்பட வேண்டும்.
  6. இச்சட்டத்தின்படியான போலீஸ் விசாரணைகள் நியாயமாகவும், விரைவாகவும் நடைபெற வேண்டும்.
  7. மல்லிமத் கமிஷனின் பரிந்துரைப்படி ஆண், பெண் யாராக இருந்தாலும் ஒழுக்கமற்ற கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்.
  8. அரசுப் பணியாளர்கள் போலிஸினால் கைது செய்யப்பட்டால் தாற்காலிக வேலைநீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. இதில் விதிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

விவாகரத்துச் சட்டங்களை எளிதாக்குக

  • மீள்பெற இயலாத வகையில் திருமண பந்தம் முறிந்து விட்டால் உடனடியாக விவாகரத்து வழங்கப்பட வேண்டும்.
  • ‘498அ’ பிரிவின்கீழ் மனைவி புகார் கொடுத்து (குற்றச்சாட்டுக்கள் உண்மையோ, பொய்யோ) அது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டால் (FIR), சட்டப்படி திருமணம் ரத்து செய்யப்பட்டதாகக் கொண்டு அதற்கான ஆவணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஏனெனில் அத்தகைய குற்றச்சாட்டு எழுந்தபின் சேர்ந்து வாழ்தல் என்பது ஒவ்வாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்த உண்மை.
  • குழந்தைகளின் கண்காணிப்பு உரிமம் (custody), கணவன், மனைவி இருவருக்கும் சமமான நிலையில் வழங்கப்பட வேண்டும். அதேபோல் அந்தக் குழந்தைக்கான சிலவுகளும் இருவராலும் சம அளவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தற்காலத்தில் இருபாலரும் சம அளவில் பொருளீட்டும் நிலை இருப்பதால் (பல இடங்களில் பெண் ஆணைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருக்கிறது), அச்செலவு முழுவதும் கணவனுடைய சுமைதான் என்னும் நியதி மாற்றப்படுதல் அவசியம்.
  • சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குடும்ப வழக்குகள் பதிவு செய்ய்ப்பட்ட ஆறு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
  • நஷ்ட ஈடு மற்றும் பேணுதலுக்கான துகை சரியான அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். மேலும் பட்டப் படிப்பு மற்றும் தொழில் சார்ந்த கல்வி பெற்றுள்ள மனைவிக்கு கணவன் ஏதும் பராமரிப்புத் துகை கொடுக்கவேண்டாம் என்பது சட்டமாக்கப்பட வேண்டும்.
  • குடும்ப நீதிமன்றங்களில் நீதிபதிகளும் வக்கீல்களும் “திருமணத்தைக் காப்பாற்றுகிறோம்” என்னும் தவறான அனுமானத்தில், அத்திருமண பிணைப்பைத் தொடர இஷ்டமில்லாத தம்பதிகளை சேர்ந்து வாழும்படி வற்புறுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

முதியோர்களை துன்புறுத்துதலை நிறுத்துக

  • 498அ சட்டப்பிரிவின் கீழ் முதியோர்களை கைது செய்தல் சட்ட பூர்வமாக நிறுத்தப்பட வேண்டும்.
  • முதியோர்கள் தங்கள் மகன், மகளுடன் வசிக்கும்போது, அவர்களின் திருமணத்திற்குப்பின் வெளியே துரத்தப்படுவதைத் தடுக்க, அவர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
  • மருமகள் தன் கணவனைப்போல் கணவனின் பெற்றோரையும் பேணுவது அவர்தம் கடமை என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும்.
  • பாட்டன்மாருக்கும் தம் பேரக்குழந்தைகளின் போஷிப்பு மற்றும் சென்று காணும் வசதி சட்டமாக்கப்பட வேண்டும்.
  • தனியாரால் நடத்தப்படும் முதியோர் காப்பகங்கள் நீக்கப்படவேண்டும். அவை வணிக முறையில் புற்றீசல் போல் தோன்றுவதால் திருமணம் ஆனவுடனேயே பெற்றோரை அங்கு அனுப்பி விடலாம் என்னும் எண்ண்ப் போக்கு மகன்/மருமகள்களுக்குத் தோன்றிவிடுகிறது.
=======================
மேலதிக விவரங்களும் புகைப்படங்களும் அடுத்த இடுகையில்!
இதுபோன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் உதவி பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:-
99410 12958 / 98807 10551 (சென்னை)
நன்றி!